சினிமாவின் ஊடாக ஏன் இஸ்லாத்தை முன் வைக்க முடியாது?


*இஸ்லாத்தை நாம் விம்பங்களாக முன்வைக்கும் போது இஸ்லாமிய உணர்வும் இஸ்லாமிய சிந்தனையும் சமூகத்தின் மத்தியில் சிறந்த முறையில் விதைக்கப்படும். எந்தளவு இன்று சினிமா எமது சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறதோ அதைவிட பன் மடங்கு சத்தியத்தை திரைப்படத்தினூடாக சொல்லும் போது மக்களின் உள்ளங்களிலேயே பதியும்.
 பாரம்பரியமான முறைகளிலேயே அன்று தொட்டு இன்றுவரை எமது அழைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  வழமையான பிரசங்க முறைகளும் வளமையான எழுத்து முறைமைகளுமே இன்னும் செயற்பாட்டில் இருந்து வருகின்றது. சில அமைப்புகளும் நிறுவனங்களும் தனி மனிதர்களும் பாரம்பரிய அழைப்பு முறைமையில் மாற்றம் ஏற்படுத்த முன் வருகின்ற போதிலும் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் எமது சமூகமில்லை என்பது கவலைக்குரிய விசயமாகும்.

நவீன உலகம் தொழில் நுட்பத்தின் உச்சத்தை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கின்ற வேளையில் எமது பாரம்பரிய மத்ரஸாக்களா நாளிதழ்களை வாசிக்கக் கூடாது. நவீன ஊடகங்களை கையாளக்கூடாது என தமது மாணவர்களுக்கு சட்டங்களை இட்டுக் கொண்டிருக்கின்றன.

இன்று நவீன உலகில் மாற்று மதங்கள் தமது அழைப்புப் பணியை மிகச் சூட்சுமமான முறையில் செய்து வருகின்றது.  சினிமா, இன்டர்நெட், கையடக்கத் தொலைபேசி என பல்வேறுபட்ட நவீன உத்திகளூடாக தாம் தமது மார்க்கத்தின் பால் அல்லது சிந்தனையின் பால் மனிதர்களை அழைப்பு விடுக்கின்றோம் என யாவரும் உணராத வண்ணம் தமது அழைப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இஸ்லாமிய சிந்தனையில் வாழ்ந்து கொண்டிருந்த பலர் அவர்கள் விரிந்த சதி வலைகளில் சிக்கும் கசப்பான சம்பவங்கள் எம் மத்தியில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நவீன உலகுடன் ஒத்துச் செல்கின்ற தஃவா முறைகளை ஏன் நாம் கையாளக் கூடாது? நவீன தொழில் நுட்பங்களுக்குள் எமது சிந்தனையை ஏன் விதைக்கக் கூடாது?

உலகின் பல்வேறுபட்ட சிந்தனை மாற்றங்களுக்கும் செயற்பாடுகளின்
மாற்றங்களுக்கும் துணை செய்கின்ற ஓர் உத்திதான் சினிமா. திரைப்படத்தினூடாக பல உலக வரலாறுகள் மாற்றப்பட்டுள்ளன. இதுவே பல்வேறுபட்ட சிந்தனைகள் உருவாகுவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. சினிமா என்று உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதோ அன்று தொட்டு  இன்றுவரை அதன் பின்னால் அள்ளுண்டு செல்லும் கோடிக்கணக்கான மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.


சினிமா ஏன் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கின்றது என்றால் திரைப்படம் என்பது பார்ப்போரின் நிறைவேறாத ஆசைகளை நிரப்புவதால் என்று சொல்லலாம். விமானத்தில் பறக்கவோ, பணக்கார வாழ்க்கை வாழவோ, மரணத்துடன் விளையாடவோ எல்லோருக்கும்வாய்ப்பதில்லை. அதை இருட்டில் காட்டும் பொய் விம்பங்கள் மூலம் நிறைவேற்றலாம். நிறைவேறா எண்ணங்கள், ஆசைகள், பயங்கள் இவைகளுக்கெல்லாம் வடிகால் அல்லது மற்றவர் வாழ்க்கையில் பங்கு கொள்ள ஏற்படுத்தப்படும் வாய்ப்பு என்று கூட சினிமாவைக் கூற முடியும்.

இப்படியான உணர்வுபூர்வமான ஊடகத்தை பலர் உணர்ந்து பார்க்கின்றனர்.
அப்படியானால் இப்படியான சினிமாவின் ஊடாக ஏன் எமது இஸ்லாத்தை முன் வைக்க முடியாது? இஸ்லாமிய சினிமா உருவாக்கப்படும் போது எமது இளம் சமூகம் அதன் பால் ஈர்க்கப்படும். இன்று தமிழ் சினிமா நடிகர்களையும் நடிகைகளையும் தமது முன்னுதாரணமாகக் கொள்ளும் எமது இளம் சமூகம் இதன்மூலமாக இஸ்லாமிய வாழ்வை முன்னுதாரணமாக எடுக்க முன் வருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.]

**இத்துறையில் சிலர் ஈடுபட முற்பட்டபோதிலும் சினிமாவிற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? இல்லையா? என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் எமது பழமைவாத சிந்தனையுடன் வாழும் இஸ்லாமிய  அறிஞர்கள் ( ?? )  என்று தம்மை கூறி கொள்பவர்கள் * பல்லைக்கழகங்களில் சினிமா சம்பந்தமான தனிப் பீடங்கள் காணப்படுகின்றன. அவற்றில் கூட ஈரானிய திரைப்படங்களே உதாரணங்களாக எடுத்துக் காட்டப்பட்டு திரையிடப்பட்டும் மாணவர்களுக்கு அத்துறை கற்பிக்கப்படுகிறது.  இன்று சர்வதேச ரீதியில் ஈரானின் திரைப்படங்களே முதலிடம் பிடித்திருக்கின்றன.

எனவே நாம் ஏன் சினிமா எடுக்க முடியுமா? முடியாதா? என்று யோசிக்க வேண்டும். இஸ்லாத்தை நாம் விம்பங்களாக முன்வைக்கும் போது இஸ்லாமிய உணர்வும் இஸ்லாமிய சிந்தனையும் சமூகத்தின் மத்தியில் சிறந்த முறையில் விதைக்கப்படும். எந்தளவு இன்று சினிமா எமது சமூகத்தில் தாக்கம் செலுத்துகிறதோ அதைவிட பன் மடங்கு சத்தியத்தை திரைப்படத்தினூடாக சொல்லும் போது மக்களின் உள்ளங்களிலேயே பதியும்.

எனவே இஸ்லாமிய அழைப்பின் தலை சிறந்த ஊடகமாக இந்த சினிமாவை நம்மால் மாற்றலாம் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. குறிப்பாக மார்க்கத்தில் சிறந்த தெளிவுடன் இருக்கின்றவர்களே இத்துறையில் காலடி
எடுத்து வைக்க வேண்டும். இஸ்லாமிய வரையறைகளை மீறி விடாது நவீன உலகிற்கேற்ப தஃவா முறையில் இவ்வாறான மாற்றங்களை அவர்களால் தான் ஏற்படுத்த முடியும். நவீன உலகிற்கும் நவீன தொழில் நுட்பங்களுக்கும் சளைத்தவர்களல்ல முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்த நாம் விழித்தெழ வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நவீன உலகிற்கு என்றும் மாற்றம் காணாத நிலையான இஸ்லாத்தை மாற்று முறையில் முன்வைக்க இளைஞர்களாகிய நாமே முன்வர வேண்டும்.

நவீன தொழில்நுட்ப உலகில் நாம் தான் காலடி எடுத்து வைக்க வேண்டும்.
முயற்சிப்போமா?* 
தகவல்: நேகம பிஸ்ரின் மொஹமட்*