காய்கறிகள்,பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.



இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், அதிகளவில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதால், காய்கறிகள் மற்றும் பழங்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில், தடை செய்யப்பட்ட ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, டில்லியில் உள்ள "நுகர்வோர் குரல்' என்ற தன்னார்வ அமைப்பு டில்லி, பெங்களூரு மற்றும் கோல்கட்டா ஆகிய நகரங்களில் உள்ள சில்லறை மற்றும் மொத்த காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளை ஆய்வு செய்தது.இதில், ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், இந்தியாவில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிக விஷத்தன்மை கொண்டதாக மாறிவருவது தெரியவந்துள்ளது

. ஐரோப்பிய நாடுகளில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள விஷத்தன்மையை விட, 750 மடங்கு அதிகமாக இந்திய காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.இந்த நச்சுத்தன்மை கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது, நரம்பு தொடர்பான நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.


இதுகுறித்து, ஆய்வுக் குழுவை சேர்ந்த சிஷர் கோஷ் கூறியதாவது:
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஐந்திற்கும் மேற்பட்ட ரசாயன உரங்களை இந்திய விவசாயிகள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், காய்கறிகள் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சுரைக்காய், முட்டை கோஸ், பரங்கிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளும், சில வகை பழங்களும் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருகிறது.இதனால், அதை உண்பவர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, இத்தகைய தடை செய்யப்பட்ட உரங்களை பயன்படுத்தை தடுக்க, அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சிசர் கோஷ் கூறினார்.