சென்னையில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா

சென்னை செங்குன்றம் கோணிமேட்டில் குட்வேர்ட் பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா 17.06.2012 அன்று காலை நடைபெற்றது. முதஸ்ஸிர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனுடைய தமிழாக்கத்தை சிராஜுல் ஹசன் அவர்கள் வாசித்தார்.

கல்வி – ஒழுக்கம் – உயர்வு (Education – Ethics – Excellence) என்ற இலக்குடன் இப்பள்ளி துவங்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை குட்வேர்ட் கல்வி அறக்கட்டளையின் டிரஸ்டி ஜனாப் முஹம்மத் அக்பர் அவர்கள் வரவேற்றார். குட்வேர்ட் கல்வி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் ஜனாப் கே.ஜலாலுதீன் அவர்கள் கல்வி வளாகத்தின் நோக்கங்களை தனது துவக்கவுரையில் எடுத்துரைத்தார்.



ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் மற்றும் குட்வேர்ட் கல்வி அறக்கட்டளையின் தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். ஒழுக்கத்துடன் சிறப்பான கல்வியை வழங்குவதற்கான நோக்குடன் இவ்வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பள்ளி இறைவனின் கிருபையால் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இன்று துவங்கப்பட்டுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே. தொடர்ந்து இவ்வளாகத்தின் இலக்கு நிறைவேற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

தலைமையுரைக்கு பிறகு கல்வி வளாகத்தை புரொஃப்ஷனல் கொரியர்ஸ் இயக்குநர், யுனிட்டி பப்ளிக் ஸ்கூலின் தலைவர் ஜனாப் அஹமத் மீரான் அவர்கள் கல்வி வளாகத்தை திறந்து வைத்தார்.

விழாவில் பம்மதுகுளம் ஊராட்சியிலிருந்து வருகை புரிந்திருந்த திரு.உதயகுமார், திருவள்ளுர் மாவட்ட மெட்ரிக் பள்ளியின் துணை ஆய்வாளர் திரு.சங்கரலிங்கம், ஆயிஷா பள்ளியின் முதல்வர் ஹாஜா மொய்னுத்தீன், ஹைதர் கார்டன் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஹுசைன்பாபு மற்றும் வெல்ஃபேர் பார்டியின் தமிழகத்தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பிறகு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக பொதுச்செயலாளர் மெளலவி ஹனிஃபா மன்பஈ, ஜனாப் அஹமத் மீரான் மற்றும் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

குட்வேர்ட் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ஜனாப் அஹமத் கபீர் அவர்கள் நன்றியுரையாற்றினார். இவ்விழாவிற்கு கல்வியாளர்கள், பெரியோர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என 350 நபர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் எல்லா தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும், சிறந்த தலைவர்களை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கல்வி வளாகம் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!