விஞ்ஞான தொழில் நுட்பம் இஸ்லாத்திற்கு அச்சுறுத்தலா?


ஏ.சி. அகார் முஹம்மத்


இன்று நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை 'அறிவியல் யுகம்' என்று வர்ணிப்பர். கணனி (Computer), மின்அஞ்சல் (E-Mail), இணையம் (Internet) டிஜிட்டல் தொழில்நுட்பம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி, உலகை ஒரு பூகோளக் கிராமமாக (Global Village) மாற்றியுள்ளது. உலகம் ஒரு பூகோளக் குடும்பமாக (Global Family) சுருங்கும் நாள் வெகு தொலை விலில்லை என நம்பப்படுகின்றது. மறு பக்கத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் உச்ச நிலையில் 'போலாக்கம்' (Cloning) எனும் செயற்பாடு உலகை பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இத்தகைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் மத நம்பிக்கையானது கேள்விக்குறியாக்கப்பட்டு வருகின்றது. இது 'அறிவியல் யுகம்;;, மதத்திற்குரிய காலமல்ல. மதமானது அதன் பங்களிப்பை வரலாற்றில் செய்து முடித்து விட்டது. நவீன வாழ்க்கை அமைப்பில் அதற்கு இடமில்லை' என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு பின்வருவன ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

   1. அறிவியலின்றி ஒரு நாகரிகம் தோன்ற முடியாது. மதமோ அறிவியலுக்கு எதிரானதாகும். சமகால மேற்குலகின் அனைத்துத்துறை சார்ந்த முன்னேற்றத்திற்கும் அது மதத்தை நிராகரித்து, அறிவியலை ஏற்று விசுவாசித்தமையே காரணமாகும்.
   2. மனித வாழ்வு வரலாற்று நோக்கில் மூன்று கட்டங்களை கொண்டது. அவையாவன:

   1. சமயம்
   2. தத்துவம்
   3. அறிவியல்

மூன்றாம் கட்டமே இறுதிக்கட்டமாகும்.
4. மதம் என்பது அபினை போன்றது. மனித சமூகம் அதிலிருந்து விடுபடாத வரை அதற்கு விடுதலை இல்லை. சுபீட்சம் இல்லை.

அறிவும் அறிவியலும் இன்றி நாகரிகம் தோன்ற முடியாது என்பது ஒரு பேருண்மையாகும். ஆயினும் மதம் அறிவியலுக்கு முரணானது, அது அறிவியலை ஆட்சேபிக்கின்றது என்ற வாதம் பிழையானதாகும். மதம் அறிவியலுக்கு எதிரானது என்ற கருத்து ஐரோப்பிய வரலாற்றில் நடைபெற்ற சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுந்தவோர் ஐரோப்பிய நோக்காகும். மதத்திற்கும் அறிவியலுக்கும் இடையில் உலகில் வேறு எங்கும் போராட்டங்கள் நிகழவில்லை. அது ஐரோப்பாவிலேயே நிகழ்ந்தது. மனித வரலாற்றில் மதம் அறிவு வளர்ச்சிக்கு தடையாக எங்கும் இருந்ததில்லை. ஐரோப்பாவில் தான் கிறிஸ்தவக் கோயில் அறிவு ஆராய்ச்சிக்கும், சுதந்திரமான சிந்தனைக்கும் எதிராக வரலாற்றின் மத்திய காலப்பிரிவில் செயற்பட்டது.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், அது அறிவு ஆராய்ச்சியை ஊக்குவித்த மார்க்கம் மட்டுமல்ல, அறிவை அடிப்படையாகக் கொண்டு எழுந்த மார்க்கமுமாகும். அது அறிவு ஆராய்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிசயிக்கத்தக்கதாகும். கல்வியினதும் அதனைக் கற்பவனதும், அதனைக் கற்பிப்பவனதும் சிறப்புகளைப் பற்றி இஸ்லாம் விரிவாகப் பேசியுள்ளது. அல்குர்ஆனை ஆராய்ந்து நோக்குகையில் அது அறிவுத்துறைக்கு கொடுத்திருக்கும் அழுத்தத்தையும் முக்கியத்து வத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

'அறிவு' எனும் பொருள்படும் 'இல்ம்' எனும் பதம் அல்குர்ஆனில் எண்பது இடங்களில் இடம்பெற்றிருக்கின்றது. இப்பதத்திலிருந்து பிறந்த சொற்களோ அல்குர்ஆனில் பல நூறு தடவைகள் வந்துள்ளன. அறிவு எனும் கருத்தை கொடுக்கும் 'அல்-அல்பாப்' எனும் சொல் அல்குர்ஆனில் 16 தடவைகள் இடம் பெற்றிருக்கின்றது. குறித்த பொருளைத் தரும் 'அந்நுஹா' எனும் சொல் இரு தடவைகள் இடம்பெற்று இருக்கின்றது. அல்குர்ஆனில் 'அல்-அக்ல்' எனும் பதம் அறிவு என்னும் பொருளைத்தரும். அதில் இடம்பெற்றுள்ள இந்த வினையடியிலிருந்து பிறந்த சொற்களின் எண்ணிக்கை 49 ஆகும். சிந்தனை என்ற கருத்தில் பயன்படுத்தப்படுதம்'அல்-பிக்ர்' என்ற சொல்லிலிருந்து பிறந்த 18 சொற்களும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. 'அல்-பிக்ஹ்' விளக்கம் என்ற பதத்திலிருந்து பிறந்த 21 சொற்களும் காணப்படுகின்றன. 'அல்-ஹிக்மா' (ஞானம்) என்ற பதம் 20 தடவைகள் வந்துள்ளதுடன், ஆதாரம் எனும் பொருள்படும்'அல்-புர்ஹான்' என்ற சொல் 7 தடவைகளும் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுடன் ஆராய்தல், நோக்குதல், சிந்தித்தல் போன்ற கருத்துக்களைத் தரும் பல சொற்களும் அல்குர்ஆனில் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன
இவை அனைத்துக்கும் மேலாக அல்குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய வசனங்களோ, அறிவைப்பற்றியும் அறிவின் அடிப்படைகளகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதை பார்க்கின்றோம்.

ஸூறதுல் அலக்கின் இவ்வாரம்ப வசனங்களைத் தொடர்ந்து இறங்கிய ஸூறா 'அல்கலமின்' ஆரம்ப வசனமும் அறிவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது.

இது போன்று ஆராயுமாறும், சிந்திக்குமாறும் மனிதர்களைத் தூண்டுகின்ற சுமார் 35 வசனங்கள் அல்குர்ஆனில் காணப்படுகின்றன. கல்வியைத் தேடி உலகில் பயணம் செய்யுமாறு ஆர்வமூட்டும் சுமார் 50 வசனங்களை அல்குர்ஆனில் காணமுடிகின்றது.

அல்குர்ஆனில் பிரபஞ்சம் தொடர்பாகவும் அறிவியல் அத்தாட்சிகள் தொடர்பாகவும் பேசுகின்ற சுமார் 750 திருவசனங்கள் காணப்படுகின்றன. அது மட்டுமா?

அல்குர்ஆனில் இயற்கை, விஞ்ஞானம், வானவியல், தாவரவியல், மிருகவியல், விவசாயம், மானிடவியல், மனோதத்துவம், மருத்துவம், சமூகவியல், வரலாறு, புவியியல் போன்ற கலைகள் தொடர்பான பல உண்மைகளும் அக்கலைகளுடன் தொடர்பான பல அடிப்படைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அல்குர்ஆன் அறிவின் அவசியத்தை எந்தளவு வலியுறுத்துகின்றதெனில், ''அறிஞர்களே அல்லாஹ்வை சரியாக அஞ்சுவார்கள்'' எனக் கூறுகின்றது.

மேலும் அல்குர்ஆன் அறியாமையையும் மடமையையும் பற்றி கூறும்போது, ''அது நரகத்தின் பாதை'' என வர்ணிக்கின்றது. பார்க்க: அல் அஃராப்: 79.

பெரும்பாலான ஹதீஸ் கிரந்தங்களில் 'கிதாபுல் இல்ம்' எனும் பெயரில் அறிவைப் பற்றிப் பேசும் ஹதீஸ்களைக் கொண்ட ஒரு தனியான அத்தியாயத்தைக் காண முடியும். அறிவுடன் தொடர்பான பல ஹதீஸ்கள் வேறு பல அத்தியாயங்களிலும் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக 'கிதாபுத்திப்பி' (மருத்துவம் பற்றியது) என்ற அத்தியாயத்தைக் குறிப்பிடலாம். நூற்றுக்கணக்கான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான ஸஹீஹுல் புகாரியில் மாத்திரம் 'கிதாபுல் இல்ம்' எனும் அத்தியாயத்தில் 102 நபிமொழிகள் காணப்படுகின்றன.

அல்குர்ஆன் விஞ்ஞான, கைத்தொழில், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுப்பதை காணமுடிகின்றது. இன்றைய கைத்தொழில் முன்னேற்றத்துக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ள இரும்பைத் தலைப்பாகக் கொண்ட ஓர் அத்தியாயமே அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது. இவ்வத்தியாயம் இரும்பின் சிவில், இராணுவ பயன்பாடுகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது. பார்க்க (57:25)

மேலும் இறைத் தூதர்களில் பெரும்பாலானோரும் பல்வேறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பதை வரலாறு உறுதி செய்கின்றது. உதாரணமாக, நபி நூஹ் கப்பல் கட்டும் தொழிலை அறிந்து இருந்தார்;; நபிமார்களான இப்றாஹீமும், இஸ்மாயீலும் கட்டட நிர்மாணிகளாக விளங்கி கஃபாவைக் கட்டினார்; நபி தாவூத் இரும்பை உருக்கி கவசங்கள் செய்யும் திறனைப் பெற்றிருந்தார். நபி ஸுலைமானோ ஜின்களின் உதவியுடன் அதிசயிக்கத்தக்க பல பணிகளை மேற்கொண்டமை பற்றி அல்குர்ஆன் விளக்குகின்றது.

அறிவு ஆராய்ச்சிக்கும், அறிவியல் அணுகுமுறைக்கும் நபி முகம்மது (ஸல்) அவர்கள் முக்கியத்துவம் அளித்த பாங்கினை அன்னாரின் சீறாவில் (வாழ்க்கை முறையில்) காணமுடிகின்றது.

'திட்டமிடல்' என்பது ஒரு பிரதான அறிவியல் அணுகுமுறை ஆகும். அல்குர்ஆன் நபி யூஸுப் (அலை) அவர்களின் பதினைந்தாண்டு பொருளாதாரத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. அத்திட்டத்தின் காரணமாக எவ்வாறு அன்று எகிப்தும் அதைச் சூழவிருந்த பிரதேசங்களும் பேரழிவிலிருந்தும், பெரும் பஞ்சத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. நபி (ஸல்) அவர்களும் தனது பிரசார வாழ்க்கையில் எவ்வாறு நுணுக்கமான திட்டங்களைத்தீட்டி செயற்பட்டார்கள் என்பதைக் காண முடிகின்றது. முதலாம் ஹிஜ்ரத், இரண்டாம் ஹிஜ்ரத், யுத்தங்கள் முதலியன இதற்கு சிறந்த சான்றாதாரங்களாகும்.

'கணக்கெடுப்பு' என்பது மற்றுமோர் அறிவியல் அணுகுமுறையாகும். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்று சில நாட்களிலேயே அங்குள்ள முஸ்லிம்களின் சனத்தொகையை கணக்கெடுக்குமாறு பணித்தார்கள். அவர்களின் தொகை அப்போது 1500 ஆக இருந்தது. (புகாரி).

இன்னுமோர் அறிவியல் அணுகுமுறையான 'பரிசோதனை' முறையை ஏற்று அங்கீகரித்தார்கள். ஈத்த மர மகரந்த மணிச் சேர்க்கைச் சம்பவம் இதற்குச் சான்றாகும். (முஸ்லிம்)

அடிப்படை இஸ்லாமிய நம்பிக்கைகள், விழுமியங்கள், பெறுமானங்கள், சட்ட திட்டங்கள் முதலானவற்றுடன் தொடர்பற்ற உலகாயத, தொழில்நுட்ப விவகாரங்களில் அந்நியரின் உதவியை நாடுதல், ஆலோசனைகளைப் பெறல் ஆகியன பிழையானவையல்ல என்பதையும் நபி (ஸல்) அவர்கள் தன் செயற்பாடுகள் மூலம் எடுத்துக்காட்டி யுள்ளார்கள். பாரசீகரின் வழிமுறையான யுத்தத்தின் போது அகழி வெட்டும் உத்தியை சல்மான் (றழி) அவர்கள் மூலம் அறிந்து, 'அஹ்ஸாப்' யுத்தத்தின் போது செயற்படுத்தியமை, குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதற்காக ஓர் உரோம தச்சன் செய்து கொடுத்த மிம்பரை பயன்படுத்தியமை முதலியன இதற்கான சில உதாரணங்களாகும்.

அல்குர்ஆனினதும், சுன்னாவினதும் இத்தகைய போதனைகளாலும் வழி காட்டல்களாலும் உந்தப்பட்டே ஆரம்ப கால முஸ்லிம்கள் அறிவாராய்ச்சித் துறைக்கும், பல கண்டு பிடிப்புகளுக்கும் முன்னோடிகளாக அமைந்தனர். ஐரோப்பா இருளில் சூழ்ந்திருந்த மத்திய காலப் பிரிவில் இஸ்லாமிய உலகில் அறிவுத்தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. முஸ்லிம்கள் அறிவின் அனைத்துத் துறைகளுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்து கலாநிலையங்கள், நூலகங்கள், ஆய்வு கூடங்கள், அவதான நிலையங்கள் என்பவற்றை கட்டியெழுப்பி உலகுக்கு அறிவொளி பரப்பினர்.

முஸ்லிம் ஸ்பெயினுக்கூடாகவே ஐரோப்பா அறிவு ஆராய்ச்சியையும், கலாசாரப் பண்பாட்டையும் பெற்றுக்கொண்டது என்பது ஒரு வரலாற்று உண்மையாகும். இது பற்றி கீழைக்தேய வரலாற்று ஆசிரியர் பேராசிரியர் பிலிப் கே. ஹிட்டி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். (P.K. Hitti)

'முஸ்லிம் ஸ்பெய்ன் மத்திய கால ஐரோப்பிய வரலாற்றில் மிக ஒளிமிக்க அத்தியாயங்களில் ஒன்றை உருவாக்கியது. கி.பி. 8ம் நூற்றாண்டின் மத்திய பகுதிக்கும் 13ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கும் இடைப்பட்ட காலப் பிரிவில் உலகம் முழுவதும் அறபு பேசும் மக்களே கலாசாரத்தினதும், நாகரிகத்தினதும் ஒளியை ஏந்துகின்றனர். அவர்கள் மூலமாகவே புராதன அறிவியலும் தத்துவமும் அழியாது பாதுகாக்கப்பட்டு, அவர்களது பங்களிப்புக்களும் இணைந்து மேற்கு ஐரோப்பாவைச் சென்றடைந்தது. இதுவே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.'
ஜோர்ஜ் ஸார்டன் (George Sarton) என்ற மேற்கத்திய அறிஞர் 'அறிவியல் வரலாற்றுக்கு ஓர் அறிமுகம்' எனும் நூலில், மத்திய காலப் பிரிவில் அறபு முஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பைப் பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றார். இக்காலப் பிரிவில் பெரும்பாலான மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான அறிவியல் ஆய்வுகள் அக்கால அறிவியல் மொழியாக விளங்கிய அறபு மொழியிலேயே அமைந்தன என அவர் கூறுகின்றார். மேற்கத்திய உலகம் ஆழமான அறிவைப் பெற விரும்பிய போதும் புராதன சிந்தனையோடு அதன் உறவைப் புதுப்பித்துக்கொள்ள முற்பட்டபோதும், முதலில் அது கிரேக்க, மூலதாரங்களை நோக்கியன்றி அறபு மூலதாரங்களை நோக்கியே திரும்பியது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பாவில் அறிவியல் துறையில் பரிசோதனை முறையை அறிமுகப் படுத்தியவராகக் கருதப்படும் ரோஜர் பேக்கன் (Roger Bacon) உண்மையில் அதற்கான வழிகாட்டல்களை முஸ்லிம்களிடமிருந்தே பெற்றுக் கொண்டார். ஸ்பெயினுக்கு வந்த அவர், அறபு அறிவியலை ஆழமாகக் கற்றுத் தேர்ந்ததனாலேயே ஐரோப்பாவுக்கு அவரால் அறிவுப் பணி செய்ய முடிந்தது.

ஓளியியல் துறையின் முன்னோடியான அல்ஹஸன் இப்னுல் ஹைஸம் உடைய கருத்துக்கள் அண்மைக் காலம் வரை ஐரோப்பாவில் செல்வாக்குச் செலுத்தின. அத்தூஸியுடைய கணிதம் தொடர்பான ஆய்வுகள் ஐரோப்பாவில் நீண்டகாலம் மேலோங்கி இருந்தன. இப்னு ஸீனாவின் 'அல்கானூன்' எனும் மருத்துவ நூல் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் 17ஆம் நூற்றாண்டு வரை மருத்துவத்துறைக்கான பிரதான மூலதார நூலாக விளங்கியது.

எனவே மேற்கண்ட விளக்கங்களிலிருந்து இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதுமல்ல் அறிவியல் ஆராய்ச்சிகளோ, நவீன கண்டு பிடிப்புகளோ அதற்கு அச்சுறுத்தலுமல்ல என்பது தெளிவாகின்றது. மாறாக, இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அதன் கோட்பாடும் நடைமுறையும் வரலாறும் அறிவு முன்னேற்றத்திற்கு அது அளிக்கும் முக்கியத்துவத்திற்கு சான்று பகர்கின்றன.

இஸ்லாத்தில் மார்க்கம் என்பது அறிவாகும். ஏனெனில் இஸ்லாமிய நம்பிக்கையானது சிந்திப்பதை, சீர்தூக்கிப் பார்ப்பதை வேண்டி நிற்பதுடன் குருட்டுப் பின்பற்றுதலை மறுத்து நிற்கிறது. மறுபக்கத்தில் இஸ்லாத்தில் அறிவென்பது மார்க்கமாகும். ஏனெனில் அது அறிவு தேடுவதை முஸ்லிமான ஆண் பெண்ணுக்கு விதியாக்கியிருக்கிறது. மார்க்க அறிவாயினும் உலக அறிவாயினும் பயனுள்ள, ஆக்க பூர்வமான அறிவைத் தேடுவதையும் அதில் ஈடுபடுவதையும் இபாதத்தாகவும், ஜிஹாதாகவும் கருதுகின்றது.

இஸ்லாத்தில் மதத்துக்கும் அறிவுக்குமிடையிலான இறுக்கமான உறவை மேற்குலக அறிஞரான ஹோர்டன் என்பார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இஸ்லாத்தில் மட்டுமே மதமும் அறிவியலும் இணைந்திருப்பதைக் காணமுடியும். அதுவே இவ்விரண்டுக்குமிடையில் இணக்கம் காணும் ஒரே சமயமாகும்.'
தற்கால விஞ்ஞான, தொழில் நுட்ப முன்னேற்றத்தை இஸ்லாம் வரவேற்ற போதிலும் இம்முன்னேற்றம் மதச்சார்பற்றதும் சடரீதியிலானதுமான போக்கைக் கொண்டிருப்பதை அது கண்டிக்கிறது. இன்றைய அறிவியல் துறையானது இறை நம்பிக்கையையும் ஆன்மீக விழுமியங்களையும் புறக்கணிப்பதனாலேயே அது ஆக்கத்துக்குப் பதிலாக அழிவை ஏற்படுத்துவதை அவதானிக்க முடிகின்றது. எனவே, இறை விசுவாசத்துடன் அமைந்த அறிவியல் முன்னேற்றத்தையே இஸ்லாம் வலியுறுத்தி நிற்கின்றது. பல திறன்களையும் அபார ஆற்றல்களையும் பெற்றிருந்த நபி ஸுலைமான் (அலை) அவற்றை வைத்து அத்துமீறலிலோ, அட்டகாசத்திலோ ஈடுபடவில்லை; பெருமையோ இறுமாப்போ கொள்ளவில்லை. மாறாக 'இது எனது இறைவன் எனக்களித்த அருளாகும்' என்று பணிவுடன் பகர்ந்தார்கள்.

துல்கர்ணைன் (அலை) அவர்கள் தனது அபார அறிவியல் ஆற்றலைப் பிரயோகித்து ஒரு பெருமதிலைக் கட்டிய போது மக்கள் அதற்காக அவருக்கு சன்மானம் வழங்க முற்பட்ட போதும் மிகவும் அடக்கமாக 'இது எனது இறைவன் எனக்கு அளித்த அருளாகும். எனது இறைவனின் குறித்த வாக்களிக்கப்பட்ட நாள் வந்து விடும் போது இந்த மதில் தவிடு பொடியாகிவிடும்' என்றார்கள்.

இத்தகைய ஈமானிய உள்ளம் படைத்தவர்களிடம் அறிவும், ஆராய்ச்சியும் இருக்கின்ற போதே உலகம், அறிவியலால் உன்னதமான பயனைப் பெற முடியும்; அறிவியல் ஆக்கத்திற்கும், மனித வாழ்வின் சுபீட்சத்திற்கும் வழிவகுக்க முடியும். அதற்காக சிந்திப்போம்; செயல்படுவோம்.