அபுதாஹிரை சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி

மிகவும் கவலைக்கிடமான உடல் நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருக் கும் ஆயுள் சிறைவாசி அபுதாஹிரை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பின்னரும், சிகிச்சைக்காக பரோலில் விடுவிக்க தமிழக அரசு மறுப்பது ஏன்? என எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு தொலை நகல் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது-

உயிருக்கு போராடும் சிறைவாசி அபுதாஹிர்

இப்ராஹீம் என்பவரின் மகன் அபுதாஹிர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் கைதி எண்.1478 ஆக அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது பரோலில் சிகிச்சைக்காக வெளிவந்திருக்கிறார். இதுவரை, அப்படி 11 தடவைகள் மருத்துவ சிகிச்சைக்காக வெளியே வந்திருக்கிறார். ஆனால், கடந்த ஓர் ஆண்டாக வைத்திய சிகிச்சைக்காக கூட அவருக்கு பரோல் மறுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவர் குடும்பத்தார் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். சென்னை உயர் நீதிமன்றம் அவரை 90 நாட்களுக்கு பரோலில் விடுதலை செய்ய 24-8-2012-ல் ஆணை பிறப்பித்தது. ஆனால், இதனை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

சீராய்வு மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதி மன்றம் காரணம் ஏதும் சொல்லாமல் அவரை பரோலில் விடுதலை செய்ய மீண்டும் உத்தரவிட்டது. அவ்வாறு உயர் நீதிமன்றத்தால் ஆணை பெற்றும் கூட அதிகாரிகள் அவருக்கு பரோல் வழங்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் கோவை சிறையிலிருந்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருடைய உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் மிகவும் மோசமான உடல் நிலையுடன் கவலைக்கிடமாக இருக்கிறார். அப்படியிருந்தும் அவரை பரோலில் அதிகாரிகள் விடுவிக்க செய்யாதிருப்பது அவரது உறவினர்களிடை யேயும், சமுதாய மக்களிடையேயும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அபுதாஹிர் தொடர்பாக நான் தங்களை கடந்த செப்டம்பர் மாதம் நேரில் சந்தித்து இதுவிஷயமாக விரிவாக கூறினேன். தாங்கள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினீர் கள். ஆனால், இதுவரை அவர் பரோலில் விடுதலையாகாததால் அவரது உறவினர்களும், சமுதாய மூத்த தலைவர்களும் என்னை இதுவிஷயத்தில் தலையிடும்படி தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த விஷயத்தில் அதிகாரிகள் உணர்வற்ற முறையில் நடந்து கொள்வதால் இது தொடர்பாக பொது மக்கள் எதிர்ப்பையும், கிளர்ச்சியையும் முன்னிருத்தக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உயர்நீதிமன்ற ஆணைப்படி அபுதாஹிரை பரோலில் விடுதலை செய்ய தேவையான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு உள்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முயற்சி

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 17 வயதில் சிறை சென்ற அபுதாஹிர் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கிறார். சிறு நீரக கோளாறு, கண்பார்வை முற்றிலும் மங்கி அவதிப்பட்டு நடைப்பிணமாகி விட்ட அவருக்கு பல முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பரிந்துரையிலும் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. பரிந்துரையிலும் பரோல் விடுப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. ஒருமுறை கூட அவர் நன்னடத்தையை மீறவில்லை என்ற நல்லெண்ணப்பதிவு உள்ளது.

கோவை ஆயுள் சிறைவாசிகள் தொடர்பாக சிறைத்துறை தலைவர் டோக்ரா இருந்த போதும், அதற்குப் பின் திரிபாதி பொறுப்பேற்ற போதும் அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பல்வேறு விஷயங்களை எடுத்துக்கூறி நிவர்த்திக்க கேட்டுக் கொண்டனர். இதற்கு ஆவன செய்யப்படும் என அவர்கள் உறுதியளித்தும் இதுவரை அது நடைபெற வில்லை.

இன்று உள்துறை செயலாளர் அலுவலகத்தோடு தொடர்பு கொண்ட எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., அபுதாஹிர் கவலைக்கிடமான நிலையிலிருப்பதால் அவரை பரோலில் விடுவிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் உயர்நீதி மன்ற உத்தரவை மீறியதற்கான விளைவுகளை உள்துறை அதிகாரிகள் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என குறிப்பிட்டார்.