“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக :

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் ஹாஜிகள் மக்கா, நோக்கி வந்து குவிந்து கொண்டிருக்கின்றனர்.

இதோ இன்னும் சில தினங்களில்

லப்பைக்..... அல்லாஹும்ம லப்பைக்..
லப்பைக்.......லாஷரீகலக லப்பைக் .....
இன்னல் ஹம்த, வன்னி'மத, லகவல் முல்க் ......
லா ஷரீகலக்..


எந்த முஸ்லிமாவது தல்பியா கூறினால் அவரது வலப்புறம் மற்றும் இடப்புறம் உள்ள கற்கள், மரங்கள், களிமண் கட்டிகள் யாவும் தல்பியா கூறுகின்றன. இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை பூமி முழுவதும் உள்ளவைகளும் இவ்வாறு தல்பியா கூறுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ 758 )

லட்சக்கணக்கான ஹாஜிகள் துல்ஹஜ் 8 முதல்12-வரை மினாவில் தங்குதல், அரஃபாவில் தங்குதல், முஸ்தலிபாவில் இரவு தங்குதல், கல்லெறிதல்,பலியிடுதல், போன்ற ஹஜ்ஜுக்கான கடமைகளை செய்ய உள்ளார்கள். அவர்கள் உள்ளத்தாலும், தம் உடலாலும் தங்களை தயார் செய்துகொண்டிருக்கிறார்கள், அந்த புண்ணிய புனித பூமியில் கால் பதித்த லட்சக்கணக்கான ஹாஜிகளில் நம் பெற்றோர்கள், நம் குடும்பத்தினர்கள்,உறவினர்கள், நண்பர்கள், எங்களுக்காக துஆ செய்யுங்கள் நாங்களும் உங்களுக்காக துஆ செய்கிறோம் என்று கண்கலங்கி கூறிய நமது மஹல்லாவாசிகள், அவர்கள் ஹாஜிகள் அல்லாஹுவின் விருந்தினர்கள்,


“பரட்டைத் தலையர்களாக, புழுதி படிந்தவர்களாக நிற்கும் எனது அடியார்களைப் பாருங்கள்” என்று அரஃபா பெருவெளியில் நிற்கும் மக்களைப் பற்றி மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத் 7702 )

அரஃபா நாளை விட வேறெந்த நாளிலும் அல்லாஹ் அடியானை அதிகமாக நரகத்திலிருந்து விடுதலை செய்வதில்லை. (அந்நாளில்) அவன் நெருங்கி வந்து இந்த அடியார்கள் என்னை விரும்புகின்றார்கள் என்று சொல்லி மலக்குகளிடம் பெருமிதம் கொள்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 2402

அமல்களில் சிறந்தது செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
“அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது.
“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது.
“ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள். ( நூல்: புகாரி 26 )

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகம் முழுவதிலிருந்தும் அந்த புனித இடத்தில் அல்லாஹுவின் விருந்தினர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் அவர்களின் ஹஜ் "ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்" ஆகுவதற்கு நாமும் துஆ செய்வோம்

துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை.
துல்ஹஜ் மாதத்தின் பத்து தினங்களிலும் செய்யும் அமல்கள்தான் அல்லாஹ்விடத்தில் மிகவும் மகத்தானதாகவும், விருப்பத்திற்குரியதாகவும் உள்ளன. இதுபோல் அந்தஸ்து கொண்ட வேறு எந்த நாட்களும் இல்லை. எனவே இந்த நாட்களில் "லா இலாஹ இல்லல்லாஹ்", "அல்லாஹு அக்பர்", "அல்ஹம்து லில்லாஹ்" ஆகிய திக்ர்களை அதிகம் அதிகம் கூறுங்கள். (நூல் முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் பத்து நாட்களிலும் அல்லாஹுவின்பால் நெருங்குவதற்கான வழிமுறைகளை தேடுவோம், அதிகமாக திக்ர், தக்பீர்கள், (அல்லாஹு அக்பர்) சுன்னத்தான நோன்புகள், தான தர்மங்கள், நன்மையான காரியங்கள் எதுவெல்லாம் உள்ளதோ அவைகள் அனைத்தையும் செய்வோம்

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே பாவமன்னிப்பை தேடி அல்லாஹ்வின் பக்கம் மீளுங்கள். நான் ஒருநாளைக்கு நூறு தடவை பாவமன்னிப்பை தேடுகிறேன் " (முஸ்லிம்)

இந்த பத்து நாட்களிலும் ஹஜ்ஜுக்கு சென்றவர்களுக்கும் நமக்கும் அல்லாஹுவிடம் அதிகமதிகம் பாவ மன்னிப்பை தேடுவோம்,

எனவே, வல்ல அல்லாஹ் இப்புனித பத்து தினத்தையும் சிறப்பாக பயன்படுத்த துணைபுரிவானாக. ஆமீன் !

அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர் ..... அல்லாஹ் அக்பர்......
லா இலாஹா இல்லல்லாஹ்....அல்லாஹ் அக்பர் ....
அல்லாஹ் அக்பர் வலில்லாஹில் ஹம்து....!