மாடி வீடுகளும் மழை ஒழுகும் கூரைகளும்


இறைவா நான்….”
இஜட். ஜபருல்லா
இறைவா…!
உன் கருணையில் நான்
கரைந்து கொண்டு இருக்கிறேன்…!

அஞ்சாறு வண்டிகளில்
நெல்வந்து இறங்கும் மிராசுகள் மத்தியில்
அன்றாடம் அரிசி வாங்கும் நான்…!
என்றாலும் -
நீ ஹலால் ஆக்கிய அனைத்தையும் உண்ண
எனக்கு மருத்துவத் தடையில்லை…!
இறைவா…
கார்களில் பயணம் செய்வோர் மத்தியில்
பழைய ஓட்டை சைக்கிளில் நான்…!
என்றாலும் -
என் சைக்கிளில்மேல் வட்டிக்கடன் இல்லை…!
இறைவா…
மாடிவீட்டுக்காரர்கள் நடுவில்
மழை ஒழுகும் -
(ஒரு பக்கம் கூரை விழுந்தும்/மறுபக்கம் விழ காத்திருக்கும்)
சின்ன ஓட்டு வீட்டில் நான்…!
என்றாலும் -
என் வீட்டுப் பத்திரம், பத்திரமாக
என்னிடத்திலேயே இருக்கிறது…!
எந்த -
லேவாதேவிக்காரர் இடமும் இல்லை…!
அறுசுவை விருந்துகள் எனக்கு
அதிக தூரம்..
என்றாலும் -
பட்டினியால் நான் படுத்ததே இல்லை…!
இறைவா…
இப்படி நிம்மதியால்
என்னை நிறைப்பவன் நீ…!
எனக்கும் ஒரு ஆசை…!
நான் ஹஜ்ஜு செய்யவேண்டும்..!
அது -
சாமான்கள் வாங்கி நிறைக்க அல்ல..
ஈமானில் சிறக்க…!
வணிகத்தைப் பெருக்க அல்ல..
புனிதத்தில் நிலைக்க…!
http://abedheen.wordpress.com/